செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தமிழ் திரையுலகமா? சர்வாதிகாரிகளின் அடிவருடிகளா?

கருணாநிதி பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த த்ரிஷா, ப்ரியாமணி, ஸ்ரேயா, பாவனாவுக்கு தடை!!

முதல்வர் கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா, பாவனா மற்றும் ப்ரியாமணிக்கு தடை விதிக்கப்படும் என தென்னிந்தியா திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்ஸி அறிவித்துள்ளது.


சினிமாக்காரர்களுக்கு முதல்வர் கருணாநிதி அவ்வப்போது அள்ளிவிடும் சலுகைகளுக்காக திரையுலகம் சார்பில் வருகிற 6-ந் தேதி சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடக்கிறது. இதில் நயன்தாரா, ரீமாசென், உள்ளிட்ட பல நடிகைகள் நடனம் ஆடுகின்றனர். கிட்டத்தட்ட 6 மணிநேரத்துக்கும் மேல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் டிவி கவரேஜ் செய்கிறது.


முன்னணி நடிகைகள் அனைவரும் குறைந்தது ஒரு குத்தாட்டமாவது மேடையில் ஆடிவிட வேண்டும் என்று அனைவருக்கும் பெப்ஸி சார்பில் அறிவிக்கப்பட்டது.


பெரும்பாலான நடிகைகள் ஒப்புக் கொண்டனர். நமீதா, சினேகா, தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி நடிகைகள் ஏற்கெனவே மானாட மயிலாட புகழ் கலா மேற்பார்வையில் நடனப்பயிற்சி எடுத்து வருகின்றனர்.


ஆனால் த்ரிஷா, ஸ்ரேயா, பிரியாமணி, பாவனா நால்வரும் நடனமாட மறுத்துவிட்டனர். விழாவுக்கு வேண்டுமானால் வருகிறோம், ஆனால் டான்ஸெல்லாம் ஆட முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது (ஸ்ரேயா ஏற்கெனவே முதல்வர் கருணாநிதிக்கு எடுத்த பாராட்டு விழா மேடையில் ஆடியுள்ளார். இவர் இப்போது மறுப்பு தெரிவித்துள்ளதன் காரணம் தெரியவில்லை!).


இதையடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என பெப்சி முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த 4 பேரும் தமிழ் படங்களில் நடிக்க சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆட மறுத்தால் தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனராம். இதனால் இந்த நடிகைகளின் வைராக்கியம் இன்று மாலைக்குள் கரைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதே போல இந்த மேடையில் நடனம் ஆடாத சில ஹீரோக்களுக்கும் தடை மற்றும் ஒத்துழைப்பு மறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரோடு ஒத்துப் போகணும்... இல்லேன்னா மிரட்டவும் செய்வோம்!-வி.சி. குகநாதன்

ஒரு அரசியல் கட்சித் தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவது போல, குறிப்பிட்ட சினிமா அமைப்புகளுக்கு அதன் உறுப்பினர்கள் கட்டுப்பட்டே தீர வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வழிக்குக் கொண்டுவருவோம்.. மிரட்டவும் செய்வோம்" என்று பகிரங்கமாகவே தெரிவித்தார் ஃபெப்ஸி தலைவர் விசி குகநாதன்.


அவர் சொன்னதை ஆதரித்துப் பேசினார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன்.


தேவ விஜயம் பிலிம் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கில் நடந்தது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குகநாதன் பேசியது:


சினிமா கலைஞர்களுக்காக எவ்வளவோ செய்துவிட்டார் முதல்வர் கருணாநிதி. அவருக்கு நன்றி சொல்ல முறையாக விழா எடுக்கிறோம். அதில் பங்கேற்பதில் என்ன கஷ்டம்?.


திரைப்பட அமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சி என்றால், அதன் உறுப்பினர்கள் தொண்டர்கள் மாதிரி. தலைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதானே தொண்டர்களின் கடமை. அதை விட்டுவிட்டு விதண்டாவாதம் செய்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் சிலர் ஆதரவு தருகிறார்கள்.


வற்புறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. நாங்கள் மிரட்டவில்லை... வற்புறுத்தினோம்.


ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்பது பழமொழி. அதை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலே கொண்டு வந்தோமோ அதேபோல இருக்குமிடம் தெரியாமலும் செய்ய முடியும்.


நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம்.
என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்... என்ன செய்ய முடியும் இவர்களால் என்றார்.


அடுத்து பேச வந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன், இங்கே விசி குகநாதன் பேசியதை முழுமையாக ஆதரிக்கிறேன். நான் பேச நினைத்ததையெல்லாம் அவர் பேசிவிட்டார்.


நாங்கள் யாரைச் சொல்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். மீடியாக்காரர்கள்தான் இதைப் பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள் என்றார் சம்பந்தமில்லாமல்.


இந்த இருவரின் பேச்சும் திரையுலகினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர்களுக்கான பகிரங்க சவாலாகவே இதை திரையுலகம் பார்க்கிறது. நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று அங்கேயே கேள்வி எழுப்பினார் விழாவுக்கு வந்த ஒரு நடிகர்.

கேள்வி கேட்ட இயக்குநர் அதிரடி நீக்கம்... இது டைரக்டர் சங்க கலாட்டா!

தங்கள் நடவடிக்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்ட வேல்முருகன் என்ற இயக்குநரை சங்கத்திலிருந்தே அதிரடியாகத் தூக்கிவிட்டனர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜாவும், செல்வமணியும் என்ற குற்றச்சாட்டுதான் இப்போதைய கோடம்பாக்க பரபரப்பு.


இதன் பின்னணி பற்றி விசாரித்தோம்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் பாரதிராஜா, செல்வமணி கோஷ்டியை எதிர்த்து தேர்தலில் நின்றவர் வேல்முருகன். ஆட்டோகிராப்பில் பிரதான காமெடியன் போல வந்தவர். இப்போதும் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். ஒரு படத்தையும் இயக்கி இருக்கிறார். மருதாச்சலம் என்ற படம் [^] இப்போது இவரது இயக்கத்தில் உருவாகி வருகிறது.


இந்த நிலையில் இவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே கல்தா கொடுத்து அவரது எதிர்காலத்துக்கே உலை வைத்திருக்கிறது சங்கம்.


எதனால் இந்த நீக்கம்?


கடந்த வாரம் இந்த சங்கத்தின் சார்பாக நடந்த பொதுக்குழுவில் ஒரு துண்டு பிரசுரத்தை விநியோகித்தாராம் வேல்முருகன். அதில்,


பதவிக்கு வந்து 100 நாட்களில் செய்வேன் என்று உறுதியளித்த திட்டங்களும் வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளதே, எப்போது நிறைவேற்றுவீர்கள்?


உங்களுக்கு ஓட்டுப் போட்டு நாங்கள் தேர்வு செய்தோம். நீங்களோ அரசியல் [^] கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு சங்கத்தின் இமேஜை டேமேஜ் செய்கிறீர்கள்?


தமிழ் ஈழப் பிரச்சினையை உங்கள் தனிப்பட்ட செல்வாக்குக்காகப் பயன்படுத்திவிட்டீர்கள்..., என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தாராம் வேல் முருகன். இதுதான் பாரதிராஜாவையும் செல்வமணியையும் கோபத்தின் உச்சிக்கே போக வைத்துவிட்டதாம்.


உடனே ஒரு இயக்குநரை விட்டு தீர்மானத்தை கொண்டு வந்து வேல்முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியிருக்கிறாரகள்.


"இப்படி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் முன் விளக்கம் தரக் கூட எனக்கு அவகாசம் கொடுக்கவில்லை. முறையான அறிவிக்கை இல்லை. சர்வாதிகாரிகள் போல இஷ்டத்துக்கும் முடிவு எடுத்தால் எப்படி? சங்கத்துக்கு நான் உறுப்பினர் மட்டும்தான்... சங்க நிர்வாகிகளுக்கு அடிமையல்ல.


இப்படி நடவடிக்கை எடுத்ததன் மூலம் எனக்கு படங்கள் கிடைக்காமல் செய்து வாழ்வாதரத்தை பறிக்க இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு?" என்று கோர்ட்டுக்குப் போய் விட்டார் வேல்முருகன்.


பாரதிராஜா, செல்வமணி இருவருக்கும் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம். தனக்கு ஆதரவான இயக்குனர்களிடம் கையெழுத்து வேட்டையும் நடத்துகிறார்.


இயக்குநர்கள் சங்கம் இதுபற்றி எந்த விளக்கமும் தர இதுவரை முன்வரவில்லை.


நியாயம் ஜெயிக்கும், அது யார் பக்கமிருந்தாலும்!



மறக்காம வோட்டுப் போடுங்க



ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

புயலின் மறுபக்கம்

ஏமாத்திப்புட்டாங்க என்று காமெடி புயல் வடிக்கும் கண்ணீ‌ரில் உண்மை இல்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். தண்ணியில் கயிறு தி‌ரிக்கும் இவ‌ரிடம் கோடிக்கணக்கில் சுட யாராலும் முடியாது.

லயன் காமெடியார் மனஸ்தாபத்தில் புயலை பி‌ரிந்து வேறு நடிகர்களுடன் கூட்டணி சேர்ந்ததுதான் புயலின் அதிரடி ஒப்பா‌ரிக்கு காரணம் என்கிறார்கள்.

ஏமாந்திருந்தால் அது லகர‌ங்களில்தான் இருக்கும், கோடி எல்லாம் சும்மா என்கிறார்கள் புயலின் பூமி சாஸ்திரம் தெ‌ரிந்தவர்கள்.

மறக்காம வோட்டுப் போடுங்க



பிரபுதேவா- நயன்தாரா

சென்னை விமான நிலையத்தில் கை கோர்த்தபடி ஜோடியாக வந்த பிரபுதேவா- நயன்தாரா இருவரும் பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

நடிகை நயன்தாராவுக்கும், நடிகர் பிரபுதேவாவுக்கும் இடையிலான காதல் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாக இருந்து வருகிறார்கள்.
ஆனாலும் தொடர்ந்து மெளனம் சாதிப்பதன் மூலம் முடிந்தவரை மீடியாவின் பரபரப்பு வெளிச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்தக் காதலுக்கு, பிரபுதேவாவின் மனைவி ரமலத் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நயன்தாராவை எங்கே பார்த்தாலும் அடிப்பேன் என்றார். ஆனால், அவருடைய கோபம் இப்போது அடங்கி விட்டது. அவரை, பிரபுதேவா சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

மனைவி ரமலத் சமாதானம் ஆனபிறகுதான் பிரபுதேவாவும், நயன்தாராவும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களாம் (இருந்தாலும் நயன்தாராவை பிரபுதேவாவுடன் பார்த்த ஆத்திரத்தில் மீண்டும் உதைப்பேன் என்று சவுண்ட் விட்டார் ரம்லத்!).

இந் நிலையில் நயன்தாரா, ஒரு கன்னட படத்தில் நடிப்பதற்கு சம்மதித்து இருக்கிறார். இதற்கான போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி, பெங்களூரில் நடந்தது.

அதில் கலந்து கொள்வதற்கு நயன்தாரா, பிரபுதேவாவையும் உடன் அழைத்து சென்றார். கன்னட படத்துக்காக போட்டோ செஷன் முடிந்து, இருவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.

ஓட்டம்...

விமானத்தில் இருந்து நயன்தாராவும், பிரபுதேவாவும் கைகோர்த்தபடி இறங்கி வந்தார்கள்.

விமான நிலையத்துக்கு வெளியே பத்திரிகை நிருபர்களும், போட்டோகிராபர்களும் கேரளாவில் இருந்து வரும் நடிகர் ஜெயராம் பேட்டிக்காகக் காத்திருந்தார்கள். இதை கவனித்த ஒரு பாதுகாப்பு அதிகாரி, பிரபுதேவா காதில் போய் கிசுகிசுத்தார்.

அவ்வளவுதான். பிரபுதேவாவின் முகம் வியர்த்துவிட்டது. நயன்தாராவின் கையை உதறினார். எங்கே ஓடி ஒளியலாம்? என்று அந்த பாதுகாப்பு அதிகாரியிடமே கேட்டார். அவர் கொடுத்த ஐடியாவின்படி, நயன்தாராவை அழைத்துக்கொண்டு உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான நிலையத்துக்கு ஓடினார்கள்.

அங்கிருந்து, பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் இருவரும் தப்பி ஓடினார்கள். அப்படி ஓடியதையும் விடவில்லை பத்திரிகை புகைப்படக்காரர்கள் என்பது பிரபு தேவா-நயன்தாராவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை!
--------------------------------------------------------------------------

மறக்காம வோட்டுப் போடுங்க



செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சாதனை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சாதனை: இரண்டு 'கிராமி' விருதுகள் பெற்றார்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, "ஸ்லம் டாக் மில்லினர்' திரைப்படத்துக்கு, இசையமைத்ததற்காக இரண்டு கிராமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் சிறந்த இசைக்கு ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள நேஷனல் அகடமி ஆப் ரெக்கார்ட்டிங் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பு, கடந்த 1958ம் ஆண்டு முதல் இந்த விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. "கிராமபோன் விருது' என்றழைக்கப்பட்ட இந்த விருது, தற்போது "கிராமி' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆண்டு "ஸ்லம் டாக் மில்லினர்' என்ற படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில், அவருடைய பின்னணி இசைக்கு ஒரு விருதும், "ஜெய் ஹோ' என்ற பாடலை இசையமைத்ததற்கு மற்றொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதே படத்துக்காக, ரஹ்மானுக்கு கடந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நடந்த விழாவில், இந்த விருதை பெற்றுக்கொண்ட ரஹ்மான், வழக்கம் போல் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து ரஹ்மான் குறிப்பிடுகையில், "இந்த விருதுகள் எல்லாம் கிடைத்ததற்காக, நான் ஹாலிவுட்டுக்கு தாவி விடமாட்டேன். தொடர்ந்து இந்தியப் படங்களுக்கு இசையமைப்பேன். இசைக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும், எனக்கு கிடைத்த இந்த விருது, என்னை இன்னும் மேம்படுத்த உதவும். இசைக்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில், தந்தை போன்றது இந்த கிராமி விருது. இந்த விருதை பெற்றதன் மூலம், எனக்கு பொறுப்புகள் கூடியுள்ளன. திரை இசையில், இன்னும் புதிய யுக்திகளை கையாளுவேன்' என்றார். இந்த விழாவில், மறைந்த பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆர் அண்ட் பி ஆல்பத்தில் கொடிகட்டிப் பறந்த 28 வயதான பெண்பாடகி பியான்ஸ், அதிக அதிகமாக ஐந்து விருதுகளைப் பெற்று, அனைவரையும் கவர்ந்தார்.
Thanks to dinamalar.com

2 கிராமி விருதுகள் வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு இசைய அமைத்ததற்காகவும், அப்படத்தின் பின்னணி இசைக்காகவும் 2 கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார்.

இசைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றிரவு நடந்தது.

இதில் திரைப்படத்திற்கான சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த திரைப்பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ திரைப்படம் இடம் பெற்றிருந்தது. பரிந்துரைக்கப்பட்ட 2 பிரிவுகளிலும் கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார்.

சிறந்த பாடலுக்கான விருது பாடலாசிரியர் குல்சார், தன்வீ ஷா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

கிராமி விருது நிகழ்ச்சி நடந்த ஸ்டேபிள்ஸ் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “2 கிராமி விருதுகளை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சாதனை புரிய உதவிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Thanks to tamil.webdunia.com

மறக்காம வோட்டுப் போடுங்க



Related Posts with Thumbnails